Sunday, January 24, 2010

[Tamil Poem] இலங்கைத்தமிழன்

இலங்கையருகில்
கடல் தண்ணீரின்
நிறம்
கடந்த நாற்பது
ஆண்டுகளாக
சிவப்பு நிறமாம்!

இலங்கையினுள்
தமிழனை
எரித்து எரித்து
தின்று தின்று
வெறுத்துப் போன
நெருப்பு
விருப்பவோய்விற்கு
எழுதிப்போட்டுள்ளதாம்!

இலங்கையில்
தமிழனின் வீட்டில்
அடுப்பு ஏற்றப்படுகிறதோ
இல்லையோ
வீட்டின் கூரைகள்
மறக்காமல்
கொளுத்தப்படுகின்றனவாம்!

*

"ஈழத்தோழன் கதறுகிறான்"

தாய்நாட்டில் சொந்தங்கள்
சமாதியாய்
வெளிநாட்டில் பந்தங்கள்
அகதியாய்

இங்கே
ஆயுதங்கள் அழிக்கப்பட்டு
மானிடம் வாழுமா?
அல்லது
மானிடம் அழிக்கப்பட்டு
ஆயுதங்கள் சிதறிக்கிடக்குமா?

அரசே
முதலில் குண்டெறிந்தது
தமிழனா? சிங்களத்தவனா?

முதலில் கொலையுண்டது
தமிழனா? சிங்களத்தவனா?

தெரியவில்லை எனக்கு
ஆனால்

நிச்சயம் சொல்வேன்
சத்தியம் செய்வேன்

இங்கே
மனித மனங்கள் சுருங்கியதால்
மயானங்கள் பெருகியது

மனங்களை விரிப்போம்
ஜனங்களை காப்போம்!

Thursday, January 14, 2010

[Tamil Poem] தியாகி ...

உடலை வருத்தி
உணவைச் சுருக்கி
உன்னை உருக்கி
சுதந்திரத்தீ உருவாக்கி
வீரம் பெருக்கி
நீ வாங்கிய விடுதலை தான் எங்கே?

*
காதலர்கள் காலாற
நடைப்பயில முடியவில்லை!

முசல்மான்கள் நிம்மதியாய்
வாழ முடியவில்லை!

கடவுள்சிலைகளே காக்கிகள்
துணையின்றி
நடமாட முடியவில்லை!

பின்பு
நீ வாங்கிய
விடுதலைத் தான்
யாருக்கு?

உனக்குத்தெரியுமா?
உன் சந்ததியரே
வெள்ளையனிடம்
விரும்பிச்சென்று
(அடிமைகளாய்)
வேலை செய்யும் காலமிது!!

*

இந்திய மக்கட்தொகையில்
பாதி வறுமைக்கோட்டிற்கீழ்
மீதி அறிவுக்கோட்டிற்கீழ்!!!

படிக்கும் குழந்தைகளையோ
பட்டைத் தீட்டுகின்றனர்
அயல்நாட்டில்
(பிற்காலத்தில்)
அறிவை அடமானம்வைக்க!

பின்பு
நீ வாங்கிய
விடுதலைத் தான்
யாருக்கு?

*

இந்திய வரைப்படத்தைச்
சுருக்க தீவிரம்காட்டுகிறது
அண்டை நாடுகள்

இந்திய நதிகளிலிருந்து
தண்ணீர் கொடுக்காமல்
மனித மனங்களை
சுருக்கியே வைத்திருக்கிறது
அண்டை மாநிலக்கட்சிகள்

பின்பு
நீ வாங்கிய
விடுதலைத் தான்
யாருக்கு?

*

மதங்களின் பெயரால் கொலைகள்
வறுமையின் பெயரால் கொலைகள்
காமத்தின் பெயரால் கொலைகள்
அரசியல் காழ்புணர்ச்சியில் கொலைகள்
மனிதவுயிர்கள் மலிவாய் போன காலமிது

பின்பு
நீ வாங்கிய
விடுதலைத் தான்
யாருக்கு?

*

நதிகளை இணைக்க
மனங்களைத் திறக்க
மதத்தலங்களைக் காக்க
மற்றுமொறு விடுதலைப்போர்
தேவைப்படுகிறது தியாகியே!

சுதந்திரத்திற்குப் பின் உன்னை மறந்தோம்
உன் விலாசம் தொலைத்தோம்
இன்று தேவையிருக்கிறது
தேடுகிறோம்
தேடுகிறோம்
வேலைப் பளுவால்
வீட்டிலிருந்தபடியே இணையத்தளத்தில்!!!

Friday, January 8, 2010

[Tamil Poem] போரில் மடிந்த கிராமத்து வீரனின் மனைவி

ஒத்தையடிப் பாதையிலே
சத்தமின்றி
நீ போகையிலே

ஒட்டுமொத்த நாட்டுமக்கள்
கூடி நின்று
அழுகையிலே

நாம்பெத்த ராசா
ஒன்னுமறியா
முழிக்கையிலே

எனக்கு
ஒட்டுச்சொட்டுக்
தண்ணீவரலே
உனக்கு
முன்பு கொடுத்த
வாக்கினாலே!!

ஆனால்
நாட்டு மக்கள்
கண்ணீராலே
என்
நெத்திக் குங்குமம்
காணலியே!!

*

ரத்தத்தில் திலகமிட்டு
யுத்ததிற்கு அனுப்பினேன்
நான்

உன் குருதியை
தேசப்பெண்களுக்கு
தானங்கொடுத்து
அவர்கள் திலகத்தைக்
காத்திருக்கிறாய்
நீ

[Tamil Poem] கற்றுக்கொள்

தன் தலையை எரித்து
பிறருக்கு ஒளிதரும்
தீக்குச்சியிடம்
தியாகத்தைப் படி

சில நாட்களே வாழினும்
தன்னுள் தேனைவைத்து
பறவைகளுக்குக் கொடுக்கும்
மலர்களிடம்
சேவையைப் படி

தலைகீழ் தொங்கினும்
சுகமாய் பிறருக்குக் காற்றைத்தரும்
மின்விசிறியிடம்
பணிவைப் படி

எத்தனை முறை அழித்தாலும்
தன் கனவு இல்லத்தை
மற்றொரு முறை பின்னும்
சிலந்தியிடம்
விடாமுயற்சியைப் படி

வெட்ட வெட்ட வளரும்
விரல் நகங்களிடம்
வளர்ச்சியைப் படி

நெருப்புக்குழம்பைத் தன்மீது வாங்கி
விண்ணூர்தி பறக்கச் செய்யும்
விண்தளத்திடம்
தாங்கிக்கொள்வதைப் படி

Monday, January 4, 2010

[Tamil Poem] இறைவனுக்கும் மறதி உண்டோ?

மலருக்குள்
தேனை
மறைத்து வைத்தாய்

சிப்பிக்குள்
முத்தை
அடைத்து வைத்தாய்

பூமிக்குள்
எரிப்பொருளை
புதைத்து வைத்தாய்

அணுவிற்குள்
சக்தியை
அடக்கி வைத்தாய்

இத்தனை செய்த
இறைவா
மானிடனுள் தூயன்பை வைக்க
மறந்துவிட்டாய்

[Tamil Poem] தாய்....

செந்தாமரை முகத்தவளே
பைந்தமிழ் அமுதை ஊட்டியவளே

உன் பொறுமையைக் கண்டு
நத்தை தன் வேகத்தைக்
குறைத்திடும்

உன் பண்பை கண்டு
சுனாமியும் பணிவை
உணர்ந்திடக்கூடும்

உன் எளிமையைக் கண்டிருந்தால்
காமராஜர் இன்னும்௯ட சிக்கனமாய்
இருந்திருக்கக்௯டும்

பாரதியே இக்காலத்தில் பிறந்திருந்தால்
மம்மி என்றே அழைத்திருப்பான்
தன் தாயை

என்னை அம்மா என்று
கூற வைத்தவளே
என்னுள் தமிழ்ப்பாலை
கலந்திட்டவளே

நான் செய்த பிழைதான் என்னவோ?
என்னைவிட உனக்கு
எமனைத்தான் பிடிக்குமோ?

Sunday, January 3, 2010

[Tamil Poem] பொய் முகங்கள்

வலியவரிடம் அப்பாவியாக
இளைத்தவனிடம் வீரனாக
மனைவியிடம் கதாநாயகனாக

பிரச்சனன என்றதும் ஒரு சந்தர்ப்பவாதியாக
தயவைத்தேடி வருபவர்களிடம் (சர்வ) அதிகாரியாக
பெண்களிடம் நகைச்சுவையாளனாக

நமக்குப் பிடிக்காதவர்களைப் புறம்பேசுபவனாக
ஒருத்தரின் மறைவுக்குப் பின் பலமாக புகழ்பவனாக
நமக்குத்தான் எத்தனை பொய் முகங்கள்!!

[Tamil Poem] தந்தை....

மறக்கவில்லை நான் எதையும்!
நான் உயரவேண்டும் என்பதற்காக
நீ குனிந்த இடங்கள் தான்
எத்தனையோ!

நான் அவதிப்படாமல் வாழ
நீ உன் கனவுகளைத்
தியாகம் செய்தது தான்
எத்தனையோ!

மாடுதன்
ரத்ததைப் பாலாய்க் கொடுக்கிறது
நீ
உன் ரத்தத்தையும்,
வியர்வையும் கலந்து
எனக்கு
வியர்வையற்ற
ஒர் வாழ்க்கையை கொடுத்திருக்கிறாய்

பக்கத்துவீட்டுப்பையனைப் பார்த்து
நம் நிலையரியாமல் நான் விரும்ப
உன் சக்திக்குமீறி வாங்கினாய்
எனக்கு ஒரு சைக்கிள்

எதிர் வீட்டில் சென்று நான்
ஒளியும் ஓலியும் பார்த்ததால்
உன் வரவுக்கு மீறி வாங்கினாய்
ஒரு வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டி

நான் படித்த பட்டம்
நான் இன்று இருக்கும் பதவி
எதுவும் எனதில்லை
நீ
என்னைப்பற்றி அன்று
கனவுகளின்றி இருந்திருந்தால்!!

உன் கோபம் எரிமலையைப் போன்றது
எதிர்த்து நிற்பவர்களைப் பொசிக்கிவிடும்
அதைக்கண்டு பெருமை அடைந்திருக்கிறேன் பலமுறை;
அநேக நேரம்
உன் கோபம்
நியாயத்தை நிலைநிறுத்த
புறப்பட்ட துப்பாக்கித்தோட்டாக்களே

உன்னைச் சர்வாதிகாரி
என்றே வர்ணிப்பேன்
பள்ளிப்பருவ நண்பர்களிடம்
ஆனால்
நீ திட்டியதும், அடித்ததும்
ஒர் சிற்பி சிலைச்செதுக்க
உளியால் பாறையை அடித்ததற்குச்
சமம் என்று உணர்ந்தேன்
பின்பு!

நான் காதலிக்கிறேன் என்று தெரிந்தும்
ஒர் தகப்பனாய் கோபப்படாமல்
ஒர் நண்பனாய்
இக்கல்யாணம் எப்படியும் நடக்கும்
என்று தைரியம் சொன்னாயே
அதை நினைத்தால்
இன்றும் என்னுள் சக்திப்பிறக்குது
இமயத்தைப் புரட்டிப்போட!

நீ ஒர் நல்ல தந்தையாய்
வாழ்ந்துகாட்டிவிட்டாய்
நான் ஒர் நல்ல தமயனாய்
இருந்துகாட்ட
எத்தனைக்காலம் தான் ஆகுமோ?

Saturday, January 2, 2010

[Tamil Poem] மலர்கள்

நாம் அனைவரும் கொலைகாரர்களே!
ஆம்
பல காலம்
வாழத் துடிப்போம் நாம்;
பிறந்தவுடனே
பரித்து மடிப்போம் பூக்களை மட்டும்!

அதிலும் பெண்கள் சுயநலக்காரர்கள்!
ஆம்
அவர்கள் சுமங்கலி யாயிருக்க
பூச்செடியை அமங்கலி யாக்கிடுவர்!

[Tamil Poem] இப்படியல்லவா நாம் வாழ்கிறோம்?

மனிதனாய்ப்பிறந்தோம் -
மதிகெட்டு இருந்தோம்

எழுதிவைத்ததைப்படிப்போம் -
ஏன் படித்தோம் என்பதை மறப்போம்

மதம், சாதி என்று பிரிவோம் -
மனமதில் சாக்கடையை நிரப்புவோம்

பணத்தை உடல் முழுவதும் ஏற்றிவிட்டோம் -
அன்பை என்றோ தொலைத்துவிட்டோம்

தீமைகள் பல செய்துவிட்டோம் -
பிறர்மேல் குற்றம் சுமத்திவிட்டோம்

உடல் தளர்ந்திடுவோம் -
ஆயினும் வீண் பெருமை பேசிடுவோம்!

Friday, January 1, 2010

[Tamil Poem] நாள்காட்டி சொல்லும் படிப்பினை

உரிக்க உரிக்க
ஒன்றும் இல்லா
வெங்காயத்தைப்போலன்றி

கிழிக்கக்கிழிக்க
புதிய செய்தியுடன்
வரும்
நாள்காட்டிப்போல் வாழ்!

[Tamil Poem] முரண்பாடு

கிழிந்த
சிறிய ஆடையுடன்
பல குழந்தைகள்
தினம் தினம்
தெருக்களில் அவதி

ஒராயிரம் ஆடையிருந்தும்
சிறிய ஆடையுடன்
புதுவருடக் கொண்டாட்டத்தில்
நடிகை நடனம்!

என்று தீரும் இந்த முரண்பாடு!!

[Tamil Poem] கனவு இந்தியா!

ரவுடிகள் ராஜ்ஜியம் சரியட்டும்
மனிதநேயம் நிறைந்த சமுதாயம் உருவாகட்டும்!

நாட்டில் தீவிரவாதம் தீக்கிரையாகட்டும்
மக்களின் மனதில் அமைதி பிறக்கட்டும்!

மதங்கொண்ட சமுதாயம் வீழட்டும்
சாதியற்ற சமுதாயம் மலரட்டும்

பொய்மை அடியோடு சாகட்டும்
உண்மை பலமடங்கு வளரட்டும்

தீமை வேரோடு பொசுங்கட்டும்
நன்மை நலமாய்த் தழைக்கட்டும்

காந்தியின் ஆயுதம் வாழட்டும்
புத்தரின் போதிமரப்படிப்பினை எல்லோருக்கும் கிட்டட்டும்

பாரதியின் பெண்ணுலகு கனவு நனவாகட்டும்
கலாமின் 2020 வாக்கு பலிக்கட்டும்