Tuesday, September 30, 2008

[Tamil Poem] - Child Labour ...

வெடித்து சுக்குநூறானது
சிவகாசி பட்டாசு மட்டும் அல்ல
அங்கே இருக்கும்
பல சிறுவர்களின் வாழ்கையும் தான்!!

[Tamil Poem] - Untouchability...

அர்ச்சகர்
என்னை தொடாமல் தந்தார் பிரசாதம்
ஆனால்
தொட்டு எடுத்தார் நான் வைத்த காணிக்கையை மட்டும் ....

மனம் கொண்ட மனிதனை மதிக்காமல்
அச்சடிக்கப்பட்ட காகிதத்தை மதிக்கும் இவர்களா
கடவுளின் தூதர்கள் ?

[Tamil Poem] - Caste again ....

விலங்கில் இருந்து மனிதன் - பரிணாம வளர்ச்சி
மனிதனில் இருந்து விலங்கு - ஜாதிகளின் வளர்ச்சி !!

[Tamil Poem] - I am carrying something or other ...

சிறு வயதில் புத்தகங்களை சுமந்தேன்
அதன் உடன் பெரிய மனிதன் ஆக வேண்டும் என்ற எண்ணத்தை சுமந்தேன்

பருவ வயதில் பல ஆசைகளை சுமந்தேன்
அதன் உடன் எதையும் எதிர்பாரா நட்பை சுமந்தேன்

வெற்றி பெற்ற பொழுது பாராட்டுகளை சுமந்தேன்
அதன் உடன் பலரின் ஆசிகளை சுமந்தேன்

தோல்வியுற்ற பொழுது வேதனையை சுமந்தேன்
அதன் உடன் வேலையற்றவர்களின் விமர்சனங்களை சுமந்தேன்

Monday, September 29, 2008

[Tamil Poem] - கையூட்டு

கையூட்டை
ஒழிக்கவேண்டும்

கையூட்டு வாங்குபவரை
கைது செய்யவேண்டும்

இப்படி முழங்கிய அதிகாரி
கோவிலுக்குச் சென்று வேண்டினார்

முடியைக் காணிக்கையாகத் தருகிறேன் கடவுளே
எனக்கு நீ பதவி உயர்வு தந்தால்!!!

Monday, September 22, 2008

[Tamil Poem] Where are we heading to?

News: Communal riots in Karnataka.

எங்கே போகிறோம் நாம்?
எதை நோக்கி போகிறோம் நாம்?

நமக்கு வரவேண்டிய தண்ணீர் கேட்டோம்
நம்மவர்களை அடித்தார்கள் வெறிபிடித்து!

உச்ச நீதிமன்றம் தீர்ப்பை அமல்படுத்துங்கள் என்றோம்
உதைத்தார்கள் அங்கிருக்கும் தமிழர்களை!!

இவ்வளவு காலம் மனிதன் என்பதை மறந்து
கன்னடன், தமிழன் என்று பிரிவினை பேசிய கூட்டம்
இன்று ஹிந்து, கிறிஸ்டியன், முஸ்லீம் என்று அடுத்தகட்ட பிரிவினை நோக்கி செல்கிறது !!

கன்னட நண்பர்களே,
சுயமாக சிந்தியுங்கள்
யாரோ தூண்டி விடுவதை நம்பி
மனித மிருகங்கள் ஆகிவிடாதீர் !!

Friday, September 19, 2008

[Tamil Poem] Paradox...

ஆண் ஆதிக்கம்
நிறைந்த இவ்வுலகில்
வாழும் பொழுது
ஒர் விதவையைப்
பூச்சூட அனுமதிக்காத
இந்தச் சமூகம்
வீழ்ந்தபின் போட்டது
பல நூறு பூமாலைகளை

Wednesday, September 3, 2008

Is being child-less a sin?

நண்பன் ஒருவன் பல வருடங்கள் காதலித்து பின்பு பெற்றோர் சம்மததுடன்
கல்யாணம் செய்து கொண்டான்.

மாதங்கள் கடந்தன ஆனால் அவன் மனைவி கருவுறவில்லை. கேட்கவாவேண்டும் இந்த சமூகத்தை; விசாரிப்பது போலும், அறிவுரை கூறுவது போலும் பலவாறு தர்ம சங்கடங்களை தெரிந்தோ தெரியாமலோ கொடுக்க துவங்கினார்

நண்பனும் அவன் மனைவியும் மனதுக்குள் வருந்தினாலும் வெளியில் காண்பித்து கொள்ளவில்லை.

இப்படியாக நாட்கள் நகர்ந்தன. என் நண்பனுக்கு கிரிக்கெட் விளையாடும் பழக்கம் உண்டு. அப்படி ஒரு முறை IDBI மைதானத்தில் விளையாடி கொண்டிற்கும் பொழுது அவனுடைய ஒரு நண்பனுக்கு குழந்தை பிறந்த செய்தி கேட்டு சந்தோஷம் அடைந்தான்

அன்றே விளையாடிவிட்டு அவன் நண்பன் வீட்டிற்கு சென்றான் வாழ்த்து தெரிவிக்க. அங்கே காத்திருந்தது அவனுக்கு அதிர்ச்சி!

குழந்தையை பார்த்துவிட்டு வெளியில் வந்த அவனை சிவந்த கண்களுடன் வரவேற்றார் நண்பனின் தாய்.

அவள் கேட்ட முதல் கேள்வி 'நீ எங்கே வந்தாய் இங்கு ?' நண்பனுக்கு ஒன்றும் புரியவில்லை ஏன் இப்படி கேட்கிறார்கள் என்று!

அவர்கள் அடுத்து 'உனக்கு தான் குழந்தை இல்லை என்று ஆகி விட்டதே இவன் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டாம் ?' என்றார்கள். இவனுக்கு ஒரு பக்கம் வெட்கம் பிடுங்கியது ஏன் ஏனென்றால் அவர்கள் பேசி கொண்டிருந்தது வீட்டின் வெளிப்புறம். சாலையில் பலர் இவர்களை பார்த்துகொண்டிருந்தார்கள். மற்றொரு பக்கம் நாம் அந்த குழந்தைக்கு எந்த கெடுத்தலும் நினைக்கவில்லையே பின்பு ஏன் இவர்கள் இப்படி பேசுகிறார்கள் என்று புரியாமல் விழித்து கொண்டிருந்தான்.

அவர்களோ திட்டுவதை நிறுத்துவதாக இல்லை இவனுக்கு பாதி கோபம் பாதி அழுகையாக அந்த இடத்தை விட்டு வேகமாக கிளம்பினான்.

சில மாதங்களுக்கு பின்னால் அவன் கேள்வி பட்ட விஷயம் அவனை உயிருடன் கொன்றது. அந்த குழந்தைக்கு பிறப்பிலேயே ஏதோ ஊனம் ஏற்பட்டு இருக்கிறது. இறைவா இது என்ன புது சோதனை என்று வருந்திய அவன் போன முறை அவன் நண்பனின் தாய் கத்தியதால் அந்த வீட்டின் பக்கம் போக வில்லை இம்முறை.

விதி அவனை விட்டு வைக்கவில்லை. அவனுடைய நண்பன் சில சொந்தகாரர்களுடன் வந்து இவனை அதே IDBI மைதானத்தில் உருட்டு கட்டையால் அடித்துவிட்டு இவனால் தான் அவன் குழந்தைக்கு ஊனம் ஏற்பட்டது என்று திட்டிவிட்டு போனான்.

குழந்தைக்கு எதனால் அப்படி ஆனது என்று சொல்லும் அளவுக்கு என் நண்பன் ஒன்றும் மருத்துவர் இல்லை! ஆனாலும் இதற்கும் அவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று மட்டும் உறுதியாக சொன்னான் அவனை நம்பும் நண்பர்களிடம்!!!

"இனி
தாங்குவதற்கு நெஞ்சில் உரமும் இல்லை
அழுவதற்கு கண்ணில் கண்ணீரும் இல்லை! "

அங்கு நடந்தவை எதுவும் இன்று வரை என் நண்பன் அவன் மனைவியிடம் சொல்லவில்லை.

இதுவரை பெண்களை தான் கிண்டல் செய்வார்கள் பாவம் என்று நினைத்திருந்த என் நண்பன் இந்த சம்பவத்திற்கு பின்னால் அவன் மனைவியை நினைத்து மிகவும் வேதனை அடைந்தான். ஆம் ஒரு ஆடவனுக்கே இந்த நிலை என்றால் பாவம் பெண்கள் இந்த சமூகம் அவர்களை என்ன பாடு படுத்தும்.

நண்பர்களே,
குழந்தையின்மை என்பது
ஓர் குறைபாடே அன்றி
குற்றமில்லை!!

அன்றில் இருந்து இன்று வரை என் நண்பன் இது வரை அவன் நண்பர்கள் கல்யாணத்திற்கு மற்றும் வளைகாப்பு போன்ற விழாக்களில் கலந்து கொள்வது கிடையாது. ஏதாவது ஒரு சாக்கு சொல்லி அதில் இருந்து விலகியே இருக்கிறான் எதற்கு வம்பென்று! கடந்தாண்டு மட்டும் ஒரு நண்பனின் கல்யாணத்திற்காக மதுரை சென்று வந்தான். அந்த மதுரைகார நண்பன் ஒரு கிருத்துவன் அவனுக்கு இதில் நம்பிக்கை இருக்காது என்று இவனாக நினைத்து கொண்டதால் !!

Tuesday, September 2, 2008

[Tamil Poem] Please save the God!








கடவுளை
மனிதனிடம் இருந்து
காக்க போவது யார்?

[Tamil Poem] India in Darkness!!

எப்பொழுது
தலைவனுக்காக மக்கள் என்ற நிலை மாறி
மக்களுக்காக தலைவன் என்ற நிலை வருமோ
அன்று தான்
இருண்ட இந்திய வெளிச்சத்திற்கு வரும்!

Monday, September 1, 2008

[Tamil Poem] Tamilnadu in Darkness...

News :: [ மின் தட்டுபாடு இனி ஐந்து மணிநேரம் மின் தடை அறிவித்தது மின் வாரியம்!! ]

படிப்பதற்கு
வெளிச்சம் இல்லாமல் மாணவன் அவதி;
ஆனால்
தெருவெங்கும் ஒரே விளக்கு தோரணம்
மின்தடை அறிவித்த தலைவன்
அந்த வழியாக செல்வதால்!!!